முஸ்லிம்களின் கட்டாயக் கடமைகளில் ஒன்றான ஹஜ் கடமையை நிறைவேற்ற இந்தியாவிலிருந்து ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் சவூதி அரேபியா சென்று வருகின்றனர். இந்த ஹஜ் கடமையை நிறைவேற்ற இந்திய அரசு இதுவரை அளித்து வந்த மானியத்தை 2022க்குள் படிப்படியாக ரத்து செய்து, புதிய ஹஜ் கொள்கையை சமர்ப்பிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவின் பேரில் மத்திய அரசின் சார்பில் ஒரு வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த வரைவு அறிக்கையில் ஹஜ் மானியம் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டுவரை படிப்படியாகத்தான் மானியத்தை ரத்து செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் ஒரே நேரத்தில் முழுமானியத்தையும் ரத்து செய்ய மத்திய அரசு முயற்சித்து வருகிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையை தமுமுக வன்மையாகக் கண்டிக்கிறது.
மேலும், ஹஜ் பயணிகள் பயணத்தை மேற்கொள்ள இதுவரை இருந்த 21 மையங்களைக் குறைத்து 9 மையங்களாக மாற்றி வரைவு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையால் ஹஜ் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவார்கள். விமானப் போக்குவரத்துக்கு மாற்றாக கடல்வழி போக்குவரத்தால் காலநேரமும், போக்குவரத்து செலவும் அதிகமாகி புனித ஹஜ் யாத்ரிகர்களுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும்.
எனவே, ஹஜ் மானியம் வழங்குவது மத்திய அரசின் கொள்கை முடிவாக்கி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யவேண்டும். அதேபோல் பயணிகளின் பயண மையங்களை மீண்டும் 21 மையங்களாக்கி அங்கெல்லாம் ஹஜ் ஹவுஸ் எனப்படும் ஹஜ் பயணிகள் விடுதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமுமுக சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
No comments:
Post a Comment