அவயங்களை தானமாக வழங்கும் புதிய முறை இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது
ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலையின் சிறுநீரக நோய் விசேட வைத்தியர் சிந்தக கலஹிட்டியாவ இதுதொடர்பாக தெரிவிக்கையில் இது இலங்கைக்கு புதிதாக இருந்த போதிலும் உலக நாடுகள் பலவற்றில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.
இதற்கமைவாக இலங்கையில் முதன் முறையாக அவயங்களை தானம் செய்வோரின் தேசிய தினம் ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி மாதம் 18ம் திகதி இடம்பெறும்.
அடுத்த மாதம் 18ம் திகதி அவயங்களை தானமாக வழங்குவது தொடர்பாக தெளிவுபடுத்துவதற்கான அமைப்பு ஒழுங்கு செய்துள்ள நடைபவனியொன்று பத்தரமுல்ல பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் இருந்து ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலை வரை நடைபெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள உள்ளனர்.
தமது அவயங்களை தானமாக வழங்க விரும்புவோர் அன்றைய தினம் அதற்கான பதிவுகளை மேற்கொள்ள முடியும் என்றும் சிறுநீரக நோய் விசேட வைத்தியர் தெரிவித்துள்ளார்.
பதிவு செய்வோர் தொடர்பான தகவல்களை உள்ளடக்கிய களஞ்சியதொகுதி ஒன்றும் முன்னெடுக்கப்படுவதுடன், நாடு முழுவதிலும் உள்ள வைத்தியசாலைகளில் அவயங்களைப் பெற்றுக் கொள்ளும் தேவையுடையோரின் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளோருக்கு அவற்றை வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சிறுநீரக நோய் விசேட வைத்தியர் சிந்தக கலஹிட்டியாவ மேலும் கூறினார்.
No comments:
Post a Comment