மூன்று நாட்களுக்கு பணியாற்றும்படி கட்டாயப்படுத்தி, போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அரசு நெருக்கடி கொடுக்கிறது என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் குற்றம் சாட்டி உள்ளார்.
சென்னை:
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
போக்குவரத்து கழக தொழிலாளர்கள் தங்கள் ஊதிய உயர்வு மற்றும் இதர பிரச்சனைகளுக்காக நியாயமான போராட்டத்தை நடத்தினார்கள். அரசு தரப்பிலும், போக்குவரத்து நிர்வாகத்தரப்பிலும் தொழிலாளர்களுக்கு உடன்பாடு எட்டப்படாததால், நீதிமன்ற முடிவை ஏற்றுக்கொண்டார்கள்.
இதை ஏற்றுக்கொள்ளாத அரசு தற்பொழுது நிர்வாகத்தின் மூலம், தொழிலாளர்களுக்கு பல இன்னல்களை கொடுத்து வருகிறது. ஓட்டுனர், நடத்துனர்கள் தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு பணியாற்றும்படி கட்டாயப்படுத்துகிறார்கள். ஆளும் கட்சியை சேர்ந்த சில தொழிலாளர்களுக்கு பொங்கல் விடுமுறை கொடுத்துவிட்டு, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களை கூடுதல் பணி செய்யவேண்டும் என கட்டாயப்படுத்துகின்றனர்.
மன உளைச்சலோடு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு உயிர்சேதம், விபத்து ஏற்பட்டால், நிர்வாகமும், அரசும் முழுப்பொறுப்பேற்க வேண்டும். போக்குவரத்து கழகத்தில் நிர்வாகம் செய்யும் தவறுகளை மூடிமறைப்பதற்கு தொழிலாளர்கள் மீது வீண் பழி போடுவதும், கூடுதல் பணி செய்ய கட்டாயப்படுத்துவதும், விடுமுறை கொடுக்க மறுப்பதும் போன்ற செயல்களில் ஈடுபடுவதை தேசிய முற்போக்கு தொழிற்சங்க பேரவை வன்மையாக கண்டிக்கிறது.
போக்குவரத்து கழகத்தை எப்படி சீர்செய்வது என்று அதிகாரிகள் ஆலோசித்து தொழிலாளர்களையும், பொதுமக்களையும் பாதிக்காத வண்ணம் போக்குவரத்து துறை வளர்ச்சி அடைவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்
No comments:
Post a Comment