இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் டாரோ கோனோ இன்று இலங்கைக்கு வருகின்றார். இலங்கை மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு இடையிலான இரு தரப்பு ஒத்துழைப்புகளை மேலும் விரிவுபடுத்தும் வகையிலேயே இந்த விஜயம் அமைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று 15 ஆண்டுகளுக்கு பின்னர் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் ஒருவர் இலங்கை வருகின்றார். எனவே இந்த விஜயமானது ஆக்கப்பூர்வமானதாகவும் இரு தரப்பு உறவுகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதாகவும் அமையும் என ஜப்பான் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த ஆண்டில் ஜப்பானுக்கு விஜயம் செய்திருந்தார். அதே போன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த ஏப்ரல் மாதம் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜப்பானுக்கு சென்றிருந்தார். இந்த இரண்டு விஜயங்களின் போது இலங்கை மற்றும் ஜப்பான் இடையிலான விரிவான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் அந்நாட்டு தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
எவ்வாறாயினும் இலங்கை வரும் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் டாரோ கோனோ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன ஆகியோரைச் சந்தித்து கலந்துரையாட உள்ளார். இருதரப்பு உறவுகளை அடுத்த கட்டத்திற்கு வலுப்படுத்துதல் பிராந்திய மற்றும் அனைத்துலக சார் விடயங்கள் குறித்தும் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் அரசாங்கத்தின் தலைவர்களுடனான சந்திப்பின் போது கலந்துரையாடவுள்ளார்.
No comments:
Post a Comment