ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒரு வாலிபர் காயமடைந்துள்ளார். ஜம்மு - காஷ்மீரில் உள்ள எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்தியப் படைவீரர்கள் தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் பாகிஸ்தான் படையினரும், தீவிரவாதிகளும் எல்லைப் பகுதியில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ரஜோரி மாவட்டத்தின் எல்லைக்கட்டுப்பாடு கோடு பகுதியில் பாகிஸ்தான் எல்லையில் இருந்து நேற்று இரவு சுமார் 7:30 மணியளவில் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலில் ஒரு வாலிபரின் காலில் குண்டு பாய்ந்தது. இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவத்தில் காயமடைந்தவர், நவ்சேரா செக்டாரின் புக்கெர்னி கிராமத்தை சேர்ந்த மொகமது யூசப் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர் மெஹ்பூபா முஃப்தி பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த மாதம் 31ம் தேதி புல்வாமா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் ஐந்து பாதுகாப்புப்படை வீரர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment