அமெரிக்க வெள்ளை மாளிகையின் முன்னாள் உதவியாளரான ஸ்டீவ் பென்னான், தன் பதவியை இழந்ததில் இருந்து, "தன் அறிவையும் இழந்துவிட்டதாக" அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
டிரம்பின் மகன் மற்றும் ரஷ்ய குழுவினர் ஒருமுறை சந்தித்ததை "தேசதுரோகம்" எனக் குறிப்பிட்ட பென்னானின் கருத்துகளையும் டிரம்ப் நிராகரித்தார்.
2016ல் ஜூன் மாதம் நடைபெற்ற சந்திப்பின்போது ஹில்லரி கிளிண்டன் குறித்த தவறான தகவல்களை டிரம்ப் மகனிடம் ரஷியர்கள் வழங்கினர்.
பத்திரிக்கையாளர் மைக்கெல் வுல்ஃப் எழுதிய புதிய புத்தகத்தில் பென்னான் கூறிய இந்தத் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள டிரம்ப் "என் அதிபர் பதவிக்கும் பென்னானுக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை. அவர் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிறகு, அவர் தன் பணியை மட்டுமல்ல, தன் அறிவையும் சேர்த்து இழந்துவிட்டார்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், "பதினேழு வேட்பாளர்களை தோற்கடித்து, நான் வேட்புமனுவில் வெற்றி பெற்ற பின்தான் எனக்கான ஊழியராக பணியாற்றினார் பென்னான். எங்களது வரலாற்று சிறப்புமிக்க வெற்றியில் பென்னானின் பங்களிப்பு மிகவும் சிறியது" என்றும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்பின், முன்னாள் முதன்மை கொள்கை வகுப்பாளராக இருந்த ஸ்டீவ் பென்னான், வெள்ளை மாளிகையின் முக்கிய நபராக இருந்ததோடு 'முதலில் அமெரிக்கா' என்னும் கோஷத்தை வடிவமைக்கக் காரணமாக இருந்தார்.
பத்திரிக்கையாளர் மைக்கெல் வுல்ஃப் எழுதிய "Fire and Fury: Inside the Trump White House" என்ற புதிய புத்தகத்தில் டிரம்ப் மகனை "தேசதுரோகி" மற்றும் "நாட்டுப்பற்று இல்லாதவர்" என பென்னான் கூறியதையடுத்து அதிபர் டிரம்ப் இதுதொடர்பான அறிக்கையை வெளியிட்டார்.
No comments:
Post a Comment