குடியரசு தின விழா ஒத்திகையையொட்டி வரும் 18-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை டெல்லி நகரின் எல்லைகளில் விமானங்கள் பறக்க அரசு தடை விதித்துள்ளது.
புதுடெல்லி:
வரும் 26ம் தேதி நாட்டின் 69-வது குடியரசு தினத்தை கோலாகலமாக கொண்டாட டெல்லியில் தீவிர ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. கலை மற்றும் சாகச நிகழ்ச்சிகளுக்கான ஒத்திகைகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. குடியரசு தினத்தன்று விமானப்படை விமானங்களும், ஹெலிகாப்டர்களும் வானில் நடத்தும் அசத்தல் சாகசங்களை இந்தியா கேட் பகுதியில் கூடும் லட்சக்கணக்கான மக்கள் கண்டுகளிப்பார்கள். இந்த வீர சாகசங்களை செய்வதற்காக ஒவ்வொரு ஆண்டும் விமானப்படையினர் ஒத்திகையில் ஈடுபடுவது வழக்கம்.
அந்த வகையில் இந்த ஆண்டும் வருகிற 18-ம் தேதி முதல் ஒத்திகைகள் நடத்தப்பட உள்ளன. இதற்காக, டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும், புறப்பட்டுச் செல்லும் விமானங்கள் வானில் பறக்க, இந்திய விமான நிலைய ஆணையம் தினமும் 100 நிமிடங்கள் தடை விதித்துள்ளது.
வரும் 18-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை 9 நாட்களுக்கு காலை 10.35 மணி முதல் மதியம் 12.15 மணி வரையில் விமான நிலையத்தில் இருந்து எந்த விமானங்கள் புறப்படவும், தரையிறங்கவும் அனுமதிக்கப்படாது. இதனால், விமானச் சேவை கடுமையாக பாதிக்கப்படும் என தெரிகிறது. இதனால் சுமார் 1000 விமானங்களின் சேவையில் பாதிப்பு ஏற்படும் என கூறப்படுகிறது
No comments:
Post a Comment