ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை செவ்வாய்க்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் அவசர சந்திப்பொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை செவ்வாய்க்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் அவசர சந்திப்பொன்றை மேற்கொள்ளவுள்ளார். ஜனாதிபதி மாளிகையில் இச்சந்திப்பு நடைபெறவுள்ளதோடு மதிய போசன விருந்தும் வழங்கப்படவுள்ளது.
ஒவ்வொரு கட்சியிலிருந்தும் தலா இரண்டு முக்கிய பிரதிநிதிகளை பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகத்தகவல்கள் தெரிவித்துள்ளன.
உள்ளுராட்சி மன்றங்களுக்கான பிரசாரங்கள் சூடுபிடித்துள்ள நிலையில் சுதந்திரக்கட்சியும், அதன் பங்காளிகளும் அடுத்த கட்டமாக முன்னெடுக்கவுள்ள நடவடிக்கைகள் குறித்து இச்சந்திப்பில் கவனம் செலுத்தப்படவுள்ளதோடு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அணியினரின் செயற்பாடுகள் அவர்கள் மீதுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கைகளை தொடர்பிலும் ஆராயப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
மறுபக்கத்தில் இலங்கை மத்திய வங்கியின் பிணை முறி மோசடிகள் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைக்கு அமைவாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது அறிவிப்பினை விடுத்துள்ளார்.
இந்நிலையில் மக்கள் விடுதலை முன்னணி, கூட்டு எதிர்க்கட்சி, சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன பாராளுமன்றத்தினை அவசரமாக கூட்டி பிணை முறிவிவகாரம் தொடர்பில் விவாதத்தினை நடத்தவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன. அதற்கு அமைவாக நாளை செவ்வாய்க்கிழமை பிற்பகல் இரண்டு மணிக்கு கட்சித்தலைவர்கள் கூட்டம் பிற்பகல் இரண்டு மணிக்கு சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் பாராளுமன்ற சபாநாயகர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
இதற்கு முன்னதாகவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்காளிக்கட்சி தலைவர்களை அழைத்துள்ள நிலையில் பிணை முறிமோசடிகள் தொடர்பாக தமது தரப்பின் நிலைப்பாடுக்களை அழுத்தம் திருத்தமாக கட்சித்தலைவர்கள் கூட்டத்திலும் பாராளுமன்றத்திலும் தெரிவிப்பதற்கான வியூகங்கள் தொடர்பிலும் ஆராயப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
குறித்த கூட்டத்தில் சிறுபான்மை,மற்றும் சிறு அரசியல் கட்சிகளான ஈ.பி.டி.பி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ், கம்னியூஸ்ட் கட்சி உள்ளிட்ட பல தரப்புக்கள் பங்கேற்கவுள்மையை உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment