காங்கிரஸ் சார்பில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற ராகுல் கருப்பு நிற மேல் சட்டை (ஜெர்க்கின்) அணிந்திருந்தார். இந்த உடையின் விலை சுமார் ரூ.63 ஆயிரம் எனக்கூறி ராகுல் மீது பா.ஜனதா குற்றம் சாட்டியுள்ளது.
ஷில்லாங்:
மேகாலயாவில் சட்டசபை தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அங்கு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். காங்கிரஸ் சார்பில் நேற்று முன்தினம் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், கருப்பு நிற மேல் சட்டை (ஜெர்க்கின்) அணிந்திருந்தார். இந்த உடையின் விலை சுமார் ரூ.63 ஆயிரம் எனக்கூறி, ராகுல் மீது பா.ஜனதா குற்றம் சாட்டியுள்ளது.
இது குறித்து கட்சியின் மேகாலயா பிரிவு தனது டுவிட்டர் தளத்தில் கூறுகையில், ‘ஊழல் மூலம் மேகாலயா அரசின் கருவூலத்தை உறிஞ்சிய கருப்பு பணத்தில் ராகுல் காந்தி இந்த உடையை வாங்கினாரா? எங்கள் குறைபாடுகளை கூறுவதைவிட உங்கள் திறமையற்ற மாநில அரசின் செயல்பாடு குறித்து நீங்கள் அறிக்கை அளித்திருக்க வேண்டும். உங்கள் அலட்சியம் எங்களை அவமதித்து விட்டது’ என்று தெரிவித்துள்ளது.
கடந்த 2015-ம் ஆண்டு இந்தியா வந்த அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை வரவேற்கும் நிகழ்ச்சியில், பிரதமர் மோடி விலை உயர்ந்த உடை அணிந்திருந்ததாக கூறி மத்திய அரசை ‘கோட்-பூட் சர்க்கார்’ என ராகுல் காந்தி விமர்சித்தார். இதற்கு பதிலடியாக பா.ஜனதா தற்போது இந்த குற்றச்சாட்டை கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment