புதுடெல்லி:
ப.சிதம்பரம் மத்திய நிதி மந்திரியாக இருந்தபோது 2007-ல் ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ.350 கோடிக்கு வெளிநாட்டு நிதி பெறுவதற்கு அன்னிய முதலீடு மேம்பாட்டு வாரியம் ஒப்புதல் அளித்ததில் முறைகேடு நடந்ததாகவும், இதில் அவருடைய மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு தொடர்பு உள்ளதாகவும் சர்ச்சை எழுந்தது.
இதுபற்றிய விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு அவருக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. இந்த சம்மனை தள்ளுபடி செய்யக்கோரி கார்த்தி சிதம்பரம் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இதற்கிடையே, கார்த்தி சிதம்பரம் இந்தியாவை விட்டு வெளியேறுவதை தடுக்கும் வகையில் அவரை தேடப்படும் நபராக அறிவித்து சி.பி.ஐ. வெளியிட்ட அறிக்கைக்கு (லுக் அவுட் நோட்டீஸ்) சென்னை ஐகோர்ட்டு தடை விதித்தது. இதை எதிர்த்து சி.பி.ஐ. தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. இதனால் கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல தடை உருவானது. சுப்ரீம் கோர்ட்டு அனுமதியுடன் ஒருமுறை அவர் வெளிநாடு செல்லவேண்டிய நிலையும் ஏற்பட்டது.
இந்த நிலையில் சி.பி.ஐ.யின் மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
விசாரணை தொடங்கியதும் நீதிபதிகள் இது தொடர்பான மனுக்களை சென்னை ஐகோர்ட்டு டிவிசன் பெஞ்சு விசாரிக்கும் என்றும், 2 மாதங்களுக்குள் இந்த வழக்கை விசாரித்து முடிவெடுக்கவேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தனர்.
No comments:
Post a Comment